• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

சென்னை சரவணா ஸ்டோரில் நகை திருட்டு வழக்கில் ஊழியர் கைது..!

Byவிஷா

Apr 25, 2022

சென்னை சரவணா ஸ்டோர் எலைட் நகைக்கடையில் இருந்து சிறுக சிறுக 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடி அடகு வைத்த ஊழியரை போலீசார் கைதுசெய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராய நகர் துரைசாமி சாலையில் சரவணா ஸ்டோர் எலைட் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் நெல்லை மாவட்டம் சமாதானபுரத்தைச் சேர்ந்த ஐசக் சாமுவேல் (26) என்பவர், ஆன்லைன் புக்கிங் மற்றும் டெலிவரி பிரிவு பொறுப்பாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் நகைக்கடையில் நடைபெற்ற தணிக்கையின் போது 625 கிராம் நகை குறைவாக இருந்தது தெரியவந்தது.
இதன் மதிப்பு சுமார் 26 லட்சம் என கணக்கிடப்பட்டது. இதனையடுத்து, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது ஐசக் சாமுவேல் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சரவணா ஸ்டோர் மேனேஜர் ராமமூர்த்தி மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஐசக் சாமுவேலை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது எடை குறைவாக இருக்கும் நகைகளை அதிக எடை இருப்பதாக போலி கணக்கு எழுதி நகைகளை சிறுக சிறுக திருடியதாக தெரிவித்துள்ளார். சிறு வயதில் .ருந்தே ஆடம்பரமாக செலவு செய்து பழக்கப்பட்ட ஐசக் கொரோனா ஊரடங்கு காலத்தில் கடன் வாங்கி ஆடம்பரமாக செலவும் செய்ததாகவும் அந்த கடனை அடைக்க நகைகளை திருடியதாகவும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, ஐசக் சாமுவேல் அடமானம் வைத்த 80 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர், ஐசக்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.