• Thu. May 2nd, 2024

எடப்பாடி பழனிச்சாமி பிரதமராவார்- சிவகாசியில் பிரேமலதா சூளுரை!

ByBala

Apr 15, 2024

அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்று எடப்பாடி பழனிச்சாமிபிரதமரா வார் என பிரேமலதா விஜயகாந்த் சூளுரை- தன் கணவர் விஜயகாந்த் மறைந்த சோகத்தை உள்ளடக்கி உங்களிடையே பேசுகிறேன் என உருக்கம்…

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு, வாக்கு கேட்டு அவரது தாயாரும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் பரப்புரை செய்தார்.

அப்போது பேசிய பிரேமலதா..,

மறைந்த விஜயகாந்த் கனவை வென்றெடுக்க வந்திருக்கும் அவரது மகன் விஜய பிரபாகரனுக்கு ஆதரவு கொடுத்து முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். விஜய பிரபாகரன் விஜயகாந்த் என்ற சிங்கத்திற்கு பிறந்த சிங்ககுட்டி, தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது, ஜான் பிள்ளையானாலும் அவர் ஆண் பிள்ளை.

அதிமுக தலைமையிலான கூட்டணி மக்களும், கூட்டணி கட்சிகளின் தொண்டர்களும், தாய்மார்களும் போற்றும் கூட்டணியாகும்.

விருதுநகர் மாவட்ட பிரதான தொழிலான பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு முடிவு கட்ட விஜய பிரபாகரன் நாடாளுமன்றத்தில் பேசி பட்டாசுக்காண தடையை நீக்குவார். தீப்பெட்டி தொழிலுக்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களை தடை செய்து தீப்பெட்டியை பாதுகாப்பார்.

எங்கள் மகன்கள் இருவரையும் ஒழுக்கமாக, பொறுப்பான குழந்தைகளாக நானும், எனது கணவர் விஜயகாந்த்ம் நல்ல முறையில் வளர்த்துள்ளோம்.

விஜய பிரபாகரனை சிறு பையன் என நினைக்காதீர்கள். அவர் கட்டிடக்கலை படிப்பு படித்து முடித்துள்ளார். 32 வயதான திருமணம் ஆகாத இளைஞரான விஜயபிரபாகரன் அனைத்து மொழிகளும் தெரிந்து பேசும் அவர் உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார்.

எனது கணவர் விஜயகாந்தை இழந்து துக்கத்தை சுமந்துள்ள நான் ஒரு அரசியல் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பதால் எதையும் வெளிப்படுத்த முடியாது.

சோகத்தை உள்ளடக்கி உங்களிடையே பேசுகிறேன்.

எங்கள் கூட்டணி கட்சிகளின் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் என் பிள்ளைகளே.

ஆகஸ்ட் 25-ம் தேதி விஜயகாந்த் பிறந்த தினத்தை விழாவாக கொண்டாடி, தேர்ந்தெடுக்கப்பட்ட 60 பெண்களுக்கு ஆண்டுதோறும் பெண்கள் நாட்டின் கண்கள் திட்டத்தின் கீழ் தலா ரூபாய் பத்தாயிரம் வழங்கப்படும்.

ஜாதி,மதம் ,இனத்திற்கு அப்பாற்பட்டு நாங்கள் அமைத்துள்ள மகத்தான கூட்டணி நாளை சரித்திரம் படைக்கும்.

தமிழகம் முழுவதும் ஒரு மௌன புரட்சி ஏற்பட்டுள்ளது. இந்த மௌன புரட்சியில் அதிமுக தலைமையிலான எங்களது கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக வந்தாலும் வியப்பில்லை. தேவகவுடா பிரதமராக வரவில்லையா? எனவே அரசியலில் எதுவும் நடக்கும்.

நான் மனைவிக்கு அப்பாற்பட்டு எனது கணவர் விஜயகாந்தை ஒரு தாய் பார்ப்பது போல் கவனித்தேன். எனது தலைவிதி அவரை இழந்தேன் என உருக்கமாக பேசினார்.

இந்த தொகுதியில் முன்பாக எம்பியாக இருந்த மாணிக்கம் தாகூர் டெல்லிவாசி. எனது மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் வாசி.

எங்கள் குடும்பத்திற்கு எல்லாமே விருதுநகர் தொகுதியில் தான் உள்ளது.

இந்த தொகுதியில் எனது மகன் விஜயபிரபாகரன் வெற்றி பெற்றால் உங்களுக்காக உழைத்து உங்களுடைய அனைத்து அடிப்படை வசதிகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைப்பார்.

அதிமுக நான்கு எழுத்து- தேமுதிக நான்கு எழுத்து- எஸ்ஐபிடி 4 எழுத்து. அதேபோன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேமுதிக சின்னம் 4வது இடம், தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் தேதி ஜூன் 4, என ராசியான கூட்டணி அமைந்தது போல நம்பரும் அமைந்துள்ளது.

தேர்தல் முடிந்து எனது மகன் விஜய பிரபாகரன் வெற்றி பெற்றவுடன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியிலேயே உங்கள் அனைவரின் ஆசியுடனும், வாழ்த்துக்களோடு அவரது திருமணம் நடைபெறும்.

பட்டாசு, தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். சிவகாசி திருத்தங்கல் பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்

எதிர்க்கட்சியினர் கூறும் பொய் வாக்குறுதிகளை நம்பி யாரும் ஏமாறாதீர்கள்! இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!- என்ற எம்ஜிஆர் பாடலை பாடி மத்திய- மாநில அரசுகள் செயல்பாடுகளை சுட்டி காட்டி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *