• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் செந்தில்பாலாஜி மீது தொடர் ஊழல் புகார் எதிரொலி..,
பதவி காலியாகிறதா..?

Byவிஷா

Apr 16, 2022

கரூர் மாவட்டத்தில் தார்சாலை ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வேறு துறைக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2006 – 2011 வரை ஆட்சியில் இருந்த திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்த போதிலும், 2011 தேர்தலில் திமுக அரசு தோல்வியை சந்திக்க 2 ஜி அலைக்கற்றை ஊழல் அப்போதைய திமுக மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் சிக்கியது தான் என்று கூறினால் அது மிகையாகாது. மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை சந்தித்த ராசா, கனிமொழி உள்ளிட்டோர் தங்களை நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபித்தனர்.
ஆனாலும், வழக்கில் அமலாக்கத்துறை முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததே வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலையாக காரணம், ஊழல் நடந்துள்ளது உண்மை என எதிர்கட்சிகள் தற்போது வரை குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் திமுக வரலாற்றில் மாபெரும் கரும்புள்ளியாக பதிந்துவிட்டது.
இதனால், தனது தலைமையிலான அரசில் எவ்வித ஊழலும் இருக்கக்கூடாது என்றும், ஆட்சியில் வெளிப்படைத்தன்மையாக செயல்பட வேண்டும் எனவும் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆனாலும், அவரது பொறுமையை சோதிக்கும் விதமாக சில அமைச்சர்கள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்கள் சார்ந்த சமூக வாக்குகள், மற்றும் அரசின் மீது அவப்பெயர் ஏற்படும் என்று பொறுமை காத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில்தான், போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பல்வேறு புகாரில் சிக்கினார். குறிப்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில போக்குவரத்துத் துறை துணை ஆணையர் நடராஜனின் அலுவலகத்தில் மார்ச் 14-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை மேற்கொண்டு ரூ.34 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்த விவகாரத்தில் ராஜ கண்ணப்பன் பெயர் அடிப்பட்டது. அதோடு, முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரை கூறி ஒருமையில் பேசியதாக அடுத்த புகார் என அடுத்ததடுத்தாக புகாரில் சிக்கியதால் அவரது பல்லை பிடுங்கும் விதமாக முக்கியமான போக்குவரத்து துறையில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார். அவர் வகித்த போக்குவரத்து துறைக்கு எஸ்.எஸ்.சிவசங்கர் நியமனம் செய்யப்பட்டார்.
இது ஒருபுறம் நடக்க, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அடுத்தடுத்து பல புகார்களில் சிக்கி வருவது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு டென்ஷனை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பிஜிஆர் பவர் எனர்ஜி நிறுவனத்திற்கு எண்ணூர் அனல் மின் திட்ட விரிவாக்கம் ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு சுமார் 4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் எனக் கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இது தொடர்பாக திமுக தலைமை மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாக எச்சரித்தும் தன்னிடம் ஆதாரம் உள்ளதாக அண்ணாமலை அழுத்தமாக கூறி வருவது திமுகவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஒருபடி மேலே சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து அண்ணாமலை புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஒரே மாவட்டத்தை சேர்ந்த செந்தில் பாலாஜி, அண்ணாமலை இடையே பல்வேறு வார்த்தை போர் வெடித்த வண்ணம் இருந்து வருகிறது.
இந்த புகாரில் இருந்து மீள்வதற்குள் செந்தில்பாலாஜி மீது சொந்த மாவட்டத்தில் வேறொரு புகார் வந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் புகழூர், என்.புதூர், சர்க்கரை ஆலை சாலை உள்ளிட்ட நான்கு முக்கிய சாலைகள் புதிதாக போடாப்படாமலே திமுக பிரமுகரின் சங்கர் ஆனந்த் இன்ப்ரா நிறுவனத்திற்கு சுமார் மூன்றரை கோடி ரூபாய் வரை பணம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த புகாரின் அடிப்படையில் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே புகார் தொடர்பாக இதுவரை 14 அரசு அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

2011 – 2016 ஜெயலலிதா அமைச்சரவையில் ஐவர் அணியில் இடம் வகித்த செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட திமுகவினரை பழிவாங்கும் நோக்கில் பலர் மீது வழக்கு தொடர்ந்து சிறைக்கு அனுப்பினார். அவர்கள் அனைவரும் தற்போதும் செந்தில் பாலாஜி மீது கடும் கோபத்தில் உள்ளனராம். தற்போது திமுகவுக்கு வந்து அமைச்சரான பிறகு தன்னை ஒரு சிற்றசர் போல் நினைத்துக்கொண்டு செந்தில் பாலாஜி செயல்படுவதாக திமுக மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இதுகுறித்து புகார்கள் பறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், திமுகவில் தற்போது தலைவலியாக உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பல்லை பிடுங்கும் விதமாக அமைச்சர் ராஜ கண்ணப்பனை இலாகா மாற்றியது போல் அமைச்சர் செந்தில் பாலாஜியை மிக விரைவில் வேறு துறைக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக திமுக மேலிட வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.