

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோமசேகர் அப்பாராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுவதால் இந்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போர் குறித்து சமூக வலைத்தளங்களான வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பினால் கிரிமினல் வழக்கு தொடரப்படும்.தவறான தகவல்களைப் பரப்புவது பொதுமக்களிடையே தேவையற்ற கலக்கத்தை ஏற்படுத்தி, சமூக ஒழுங்கின்மைக்கு வழிவகுக்கும். மேலும் போர் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவது குற்றமாவதுடன் அது தண்டனைக்குரியது. சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்புவதை தவிர்க்க வேண்டும். என்றும், பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எனவே, போலி செய்திகள், தவறான தகவல்கள், வதந்திகள், மிரட்டல்கள் ஆகியவற்றை காரைக்கால் மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு மூலம் தொடர்ந்து சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் துறைமுகம், ஓ.என்.ஜி.சி,புதுச்சேரி மின்திறல் குழுமம், உள்ளிட்ட பெரிய தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்க கட்டிடங்கள், அரசு மருத்துவ கட்டிடங்கள் உள்ளிட்ட பகுதிகளின் மேலே மறு உத்தரவு வரும் வரை ட்ரோன்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

