• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

வேலியே பயிரை மேய்வதா…. தொடரும் பாலியல் பிரச்சினை – உடனடி தண்டனை வேண்டும்

பாலியல் பிரச்சினையால் ஆசிரியரை பணிநீக்கம் செய்தும் கல்விச் சான்றிதழ்களைப் பறிமுதல் செய்யவேண்டும். பள்ளி மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் பணி அறப்பணி அதனை அர்ப்பணி என்ற தாரகமந்திரத்திற் கேற்ப ஆசிரியர்கள் பணிபுரிந்துவருகிறார்கள். இந்நிலையில் ஒரு சிலரின் தவறான செய்கையால் ஆசிரியர் சமுதாயமே தலைகுனிய வேண்டியுள்ளது. 

பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது படிப்பதற்கும் நல்லப்பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்வதில் மட்டும் திருப்தியடைந்துவிடவில்லை. மாறாக குழந்தைகள் பாதுகாப்பாகத் திரும்பிவருவார்கள் என்று நம்புவது ஆசிரியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையால் மட்டுந்தான். அதனை கெடுப்பதற்காகவே சில ராஜகோபால், சக்கரவர்த்தி போன்ற தரங்கெட்டவர்களால் ஆசிரியரின் புனிதம் கெட்டுப்போகிறது.

பாலியல் தொடர்பானச் செயலில் ஈடுபடுவோர் எந்தப்பள்ளியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் மீது குற்றம் நிருபிக்கப்பட்டவுடன் பணிநீக்கம் செய்வதோடு அவரின் கல்விச் சான்றிதழ்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது, மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

தற்போது ஆசிரியர் சக்கரவர்த்தி கைதுசெய்து உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பாராட்டி வரவேற்கின்றது. தனியார் பள்ளி நிருவாகம் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கிறார்களே தவிர மாணவர்களின் நலனை கருத்தில் கொள்வதில்லை. இதனால் வேலியே பயிரை மேயும் இழிவுசெயல் அரங்கேறுகிறது. அரசுப்பள்ளிகளை கண்காணிப்பது போல தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளும் மாணவர்களின் நலனும் தொடர்கண்காணிப்பு அவசியம்.

அரசு கல்வித்துறை முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்களும் தனியார் பள்ளிகளை கண்காணிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒழுக்கத்தினை வலியுறுத்தும் ஆசிரியர்களே ஒழுக்கக்கேடாக நடந்துக்கொள்வது ஆசிரியர் இனத்துக்கே கரும்புள்ளி. உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கத்தவறும் நிருவாகத்தினால் மனஉளைச்சல் உயிரிழப்பு வேதனையளிக்கிறது.

மேலும், எதிர்காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது கட்டாயமாகும் சூழல் உருவாகலாம். ஆகையால் ஆன்லைன் வகுப்புகளுக்கென்று அரசே தனி சாப்ட்வேர் உருவாக்கப்படவேண்டும். அதன் முழுக்கட்டுபாடும் அரசின் வசம் இருக்கவேண்டும். இதனை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி மாண்புமிகு.முதல்வர் அவர்ளை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.