தனியார் நிறுவனம் ஒன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வித்தியாசமான கவர்ச்சிகரமான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது. அந்த திட்டத்தில், ஒருவர் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 116 செலுத்தினால் சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு அழைத்து செல்வோம் என்றும், அங்கு 5 நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்த கவர்ச்சிகரமான விளம்பரம் குறித்து தேவஸ்தானம் அளித்துள்ள விளக்கத்தில், வி.ஐ.பி. தரிசனத்தை நேரடியாக வி.ஐ.பி.களுக்கும், அவர்களின் சிபாரிசு கடிதம் கொண்டுவருபவர்களுக்கும் மட்டுமே வழங்கி வருகிறோம். இதுபோன்ற தனியார் நிறுவனங்களுக்கோ அல்லது சுற்றுலா நிறுவனங்களுக்கோ வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வழங்கப்படாது. இதுபோன்ற கவர்ச்சி விளம்பரங்களை செய்யும் கும்பலை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளது.
மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளை பெயரில் புதிய திட்டத்தை தொடங்கி உள்ளதாகவும், இதன்மூலம் யார் வேண்டுமானாலும் தேவஸ்தானத்தில் ரூ.10,500 செலுத்தி இந்த டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.