• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை கண்டித்து, திமுக ஒன்றிய கவுன்சிலர் போராட்டம்

ByI.Sekar

Mar 12, 2024

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்ற மனுக்கள் குழு தேனி மாவட்டத்திற்கு ஆய்விற்கு வந்தபோது ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த திருமலாபுரம் கிராமத்தில் மக்களின் பல ஆண்டு கோரிக்கையான சிறுபாலம் அமைப்பதற்கு ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய இரண்டாவது வார்டு திமுக கவுன்சிலர் வைரமுத்து மனு கொடுத்திருந்தார்.
அந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று அவருக்கு பதில் அனுப்பப்பட்டது.
ஆண்டிபட்டி ஒன்றிய பொது நிதியிலிருந்து பாலம் கட்டுவதற்கு அனுமதி அளித்து மனு செய்திருந்த, திமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு பதில் முறையாக அனுப்பப்பட்டது.
ஆனால், பதில் அனுப்பி 7 மாதங்கள் ஆகியும் பாலம் கட்ட எவ்வித நடவடிக்கை எடுக்காமல் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் காலம் கடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
முதலில் சட்டமன்ற மனுக்கள் குழுவின் பரிந்துரையின் படி பாலம் கட்டுவதாக கூறிய ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பின்பு தற்போது பாலம் கட்டுவதற்கு முடியாது என்று கூறி அலைக்கழித்து வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் கொடுத்த மனு ஆய்வு செய்யப்பட்டு உரிய முறையில் பாலம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான உத்தரவு நகல் முறையாக ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டும் ஆணையாளரின் மெத்தன போக்கால் தற்போது முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
இந்நிலையில் இன்று திருமலாபுரத்தில் உடனடியாக பாலம் கட்ட வலியுறுத்தியும் , சட்டமன்ற மனுக்கள் குழு உத்தரவை செயல்படுத்த கோரியும் ஆண்டிபட்டி இரண்டாவது வார்டு திமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வைரமுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அறைமுன் அமர்ந்து கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இப்போராட்டத்தால் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.