• Sat. Apr 20th, 2024

அ.தி.மு.க உட்கட்சிப் பூசல்: தி.மு.க.வுக்கு நேரடியாக செக் வைக்கும் பா.ஜ.க..!

Byவிஷா

Nov 25, 2021

திருப்பூர் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திராவிட அரசியல் உயர்த்தி பிடிக்கப்படும் தமிழகத்தில், தாமரையை மலரச் செய்ய பல்வேறு வியூகங்கள் வகுத்து பாஜக செயல்பட்டு கொண்டிருக்கிறது. பலம் வாய்ந்த அதிமுக, திமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகளை தங்கள் வசப்படுத்துவது, மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு குடைச்சல் கொடுப்பது, சமூக வாக்குகளை ஈர்ப்பது, பூத் கமிட்டிகளை பலப்படுத்த கீழ் மட்டத்தில் இருந்து வேலை செய்வது என பக்கா ஸ்கெட்ச் போட்டு காய்களை நகர்த்தி வருகின்றனர்.


இதற்கு பலனாக கடந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு இடங்களில் பாஜக வென்றது. இது தமிழகத்தில் தாமரை ஒருபோதும் மலராது என்ற கோஷத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த வெற்றியால் கிடைத்த உற்சாகத்தில் தங்களது களப் பணியை மேலும் அதிகப்படுத்தியுள்ளனர். தமிழகத்திற்கு தேசிய தலைவர்களின் வருகையை அதிகப்படுத்த முடிவு செய்து, அரசியல் பயணங்கள் என்றில்லாமல், ஆன்மீக பயணங்கள் என்ற பெயரில் பிற மாநில பாஜக முதல்வர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.


வரும் 2024 மக்களவை தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை இலக்காக கொண்டு பாஜக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக திகழும் அதிமுக உட்கட்சி பூசலால் திணறிக் கொண்டிருக்கிறது. இரட்டைத்தலைமைப் பிரச்சினை, சசிகலாவை இணைப்பது போன்ற விவகாரங்கள் காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கடும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரும் பாஜக, எதிர்க்கட்சிக்கான அனைத்து அம்சங்களையும் கையிலெடுக்கத் தொடங்கியுள்ளது. மின்துறையில் பல கோடி ரூபாய் ஊழல் என அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைக்க அரசியல் சூடுபிடித்தது. அந்த வரிசையில் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைக்க நேற்றைய பாஜக மாநில செயற்குழு கூட்டம் வாய்ப்பாக அமைந்துவிட்டது.


கொங்கு மண்டலத்தில் தற்போது இரண்டு பாஜக எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். எனவே இங்கு தங்களது செல்வாக்கை அதிகப்படுத்தும் நோக்கில், திருப்பூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தை நடத்தியுள்ளனர். இதற்காக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வந்திருந்தார். இந்த கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதலாவது, கொரோனாவை வெற்றி கண்ட பிரதமர் மோடிக்கு நன்றிகளும், பாராட்டுகளும். இரண்டாவது, மக்கள் விரோத திமுக அரசின் அணுகுமுறைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் கண்டனம்.


இவற்றில் இரண்டாவது தீர்மானம் தான் அதிக கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்த பின்னரும், தமிழக அரசு குறைக்கவில்லை. வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.8,000 மட்டுமே நிவாரணம் அறிவித்தது, நீட் தேர்வு ரத்து என போலி வாக்குறுதியை அளித்தது, ஹிந்துக்களுக்கு விரோதமான செயல்பாடு, வடகிழக்கு பருவமழையின் போது போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


அதுமட்டுமின்றி கோயில்களில் தங்கத்தை உருக்குவதில் நீதிமன்ற உத்தரவுப்படி செயல்பட வேண்டும், பயிர் சேதத்திற்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆளும் திமுக அரசிற்கு எதிரான நேரடியான தாக்குதலை பாஜக கையிலெடுத்திருப்பது தெரியவருகிறது. பாஜகவின் இத்தகைய அரசியல் அதிரடிகள் வரும் நாட்களில் மேலும் வலுவடையுமா? அதேசமயம் அதிமுக விழித்துக் கொள்ளுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *