நீட் தேர்வு காரணமாக திமுக.,வினர், நடத்தும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் திமுக.,வினர் பிண அரசியல் செய்வதாகவும் தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க., வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை பேசியதாவது: குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 615 இடங்களில் பா.ஜ., போட்டியிடுகிறது.
இதில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும். சென்னையில் 200 வார்டுகளிலும், கோவை போன்ற மாநகராட்சியில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறோம். 100 சதவீத வெற்றி என்பதை குமரி மாவட்டத்தில் நிரூபித்து காட்டி, தமிழகத்துக்கு குமரி மாவட்டம் வழிகாட்டி என்பதை நீங்கள் மீண்டும் உணர்த்த வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை விட அதிக இடங்களில் பா.ஜ.க, வெற்றி பெற வேண்டும்.குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; அவர்களை வாழ்த்துகிறேன்.
நீட் தேர்வு காரணமாக திமுக.,வினர், நடத்தும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் எதிர்க்கிறார்கள். இதனால் பிண அரசியல் செய்கிறார்கள். நீட் தேர்வு மூலம்தான் இருளர் சமுதாய மாணவிக்கு மருத்துவக்கல்லூரியில் அனுமதி கிடைத்துள்ளது. பிற்படுத்தப்பட்ட, பல மாணவர்களுக்கு மருத்துவர்கள் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது, எனவே நீட் தேர்வு மூலம் அனைவருக்கும் சமூக நீதி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.