நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பல திருப்பங்களுடன் இருக்குமென்று ஒவ்வொரு கட்சியும் ஆவலுடன் உள்ளது.அனைத்து கட்சிகளும் தயார் நிலையிலும் வைத்துள்ளது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்தரசன் கூறியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்த முயற்சி எடுத்துள்ள திமுக அரசுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை காலமாக நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாமல் அதிகாரிகளின் செயல்பாடுகளால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். நடைபெறவிருக்கும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என நம்புகிறேன்.
பாஜக, அதிமுகவின் தோளில் ஏறிக்கொண்டு கைப்பொம்மையாக அதிமுகவை ஆட்டி வைக்கிறது. அதோடு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அதிமுக குறித்து அவதூறு பேசினார்.அடுத்தநாளே பாஜக தலைவர் அண்ணாமலை அவர் பேசியது தவறு தான் அதிமுக சிறந்த எதிர்கட்சி எனக்கூறினார். அவர்களுக்குள் சுமூகமான உறவு இல்லை. அவ்வாறு இருக்கையில் அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவது சாத்தியம் இல்லாத ஒன்று. பண்டித நேரு அவர்கள் மக்களின் நலனுக்காக பல்வேறு பொது நிறுவனங்களை தொடங்கினார்.
ஆனால் தற்போது பிரதமர் மோடி அவற்றை தனியாருக்கு விற்று வருகிறார். ஏர் இந்தியா நிறுவனத்தை வெறும் 18 கோடிக்கு மோடி தாரைவார்த்து உள்ளார். அதோடு மின்சாரம், ரயில்வே என அனைத்து துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மக்கள் நலனை விட மோடி அரசுக்கு கார்ப்பரேட் நலனே முக்கியம் என்று அவர் கூறினார்.