தமிழகம் முழுவதும் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்குமான வாக்கு எண்ணிக்கை ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தேனி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆண்டிப்பட்டி வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து தபால் ஓட்டுகள் உள்ள பெட்டியை திறந்து வாக்கு எண்ணிக்கையை துவக்கிவைத்தார்.
மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் ஆய்வு செய்துவிட்டு சென்றார். காலை 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 18 வார்டுகளில் திமுக ஒன்பது இடங்களிலும் திமுக கூட்டணி சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியது. இதனால் திமுக கூட்டணியின் மொத்த வெற்றி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது . இதனால் மொத்த பெரும்பான்மைக்கு தேவையான பத்து இடங்களை விட ஒரு இடம் கூடுதலாக பெற்று 11 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியதால் ஆண்டிபட்டி பேரூராட்சி திமுக கூட்டணி வசமானது . இதையடுத்து அதிமுக ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தவிர சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றிபெற்றனர். திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து திமுகவினர் உற்சாகம் அடைந்து பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றைய வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த மாதம் மார்ச் 2-ஆம் தேதி பதவி ஏற்றுக் கொள்கின்றனர்.மார்ச் 4ஆம் தேதி தலைவர் மற்றும் துணைத்தலைவர் கான தேர்தல் நடைபெற உள்ளது. இன்றைய தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததை அடுத்து கடந்த ஒரு மாத காலமாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்துள்ளன.