கரூரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பெண்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கரூர் மாவட்ட கபடி கழக தலைவர் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
கரூர், மண்மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட பண்டுதகாரன்புதூர் பகுதியில் இயங்கி வரும் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் பாரதியார் யுனிவர்சிட்டி சார்பில் மாவட்ட அளவிலான பெண்கள் கபடி போட்டிகள் நடைபெற்றது. கபடி போட்டிகளில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 37 கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
இதில் அமராவதி கலை அறிவியல் கல்லூரி கரூர் அணி முதல் இடத்தையும், ஹோலி கிராஸ் காலேஜ் திருச்சி இரண்டாம் இடத்தையும், போன் செக்யூர் தஞ்சாவூர் மூன்றாம் இடத்தையும், எம்ஐடி முசிறி அணி நான்காம் இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட, ராகா ஆயில்ஸ் நிர்வாக இயக்குனர் லயன் எஸ் தமிழ்மணி, கரூர் மாவட்ட கபடி குழு தலைவர் அன்புநாதன், திருச்சி பாரதிதாசன் கல்லூரி பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கி கௌரவித்தனர்.
இதில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ப.நடேசன், தலைவர் மற்றும் தாளாளர் கோதை, கபடி கழக செயலாளர் கரூர் சேதுராமன், கரூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கபடி பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.