• Wed. Apr 23rd, 2025

மகளிர் விடுதியில் வடமாநில பெண்களிடம் தமிழ் கற்றுக் கொடுக்கும் படி, மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்…

ByAnandakumar

Mar 20, 2025

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட மணல் மேடு கிராமத்தில் தனியார் பெண்கள் தங்கும் விடுதி கட்டுமானப்பணியினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தனியார் (அட்லஸ்) ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்காக கட்டப்படும் பணிகளை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுடன் பார்வையிட்டு பெண்கள் தங்கும் அறை, உணவுக் கூடம், சமையல் அறை, குளியல் அறை உள்ளிட்டவை கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக ஆய்விற்கு வந்த மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு அந்நிறுவனத்தின் உரிமையாளர் நாச்சிமுத்து சால்வை, மாலை அணிவித்து வரவேற்றார். அப்போது, அங்கு பணி புரியும் வடமாநில பெண்களை வரிசையில் நிற்க வைத்து வரவேற்றார்.

அப்போது, அப்பெண்கள் வணக்கம் தெரிவித்து ஆட்சியரை அப்பெண்கள் வரவேற்றனர்.அவர்களிடம் தமிழ் தெரியுமா என ஆட்சியர் கேட்டதற்கு கொஞ்சம், கொஞ்சம் தெரியும் என தெரிவித்தனர்.

அதற்கு ஆட்சியர் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்றார். மேலும், வடமாநில பெண் தொழிலாளர்களின் பொழுது போக்கிற்காக ஒரு பெரிய கூடம் அமைக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்ததற்கு ஆட்சியர் நல்ல ஹிந்தி படங்களை திரையிடுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.