• Wed. Apr 24th, 2024

தேவன்குறிச்சி மலைப்பகுதியில் கற்கால குகைகள், பாறை ஓவியம் கண்டுபிடிப்பு..!

Byவிஷா

Dec 23, 2021

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி மலைப்பகுதியில் கற்காலத்தை சேர்ந்த குகையும், பாறை ஓவியம் கற்படுக்கை பாறைக் கீறலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன் ஆய்வாளர் அனந்த குமரன், நாகபாண்டி ஆகியோர் கொண்ட குழுவினர் தேவன்குறிச்சி மலைப்பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு செய்தபோது புதிய கற்காலத்தை சேர்ந்த நீண்ட குகை வெண்சாந்து (வெள்ளை நிறம்) ஓவியம் கற்படுக்கை பாறைக் கீறல் போன்றவை கண்டறியப்பட்டுள்ளது.


இது குறித்து உதவி பேராசிரியர் முனைவர் து முனீஸ்வரன் கூறியதாவது:-
தென்தமிழகத்தில் இருந்து சேர நாட்டிற்கு முக்கிய வணிக பாதையாக இருந்தது தே.கல்லுப்பட்டி. இங்கு வரலாற்று சிறப்பு மிக்க தேவன்குறிச்சி மலையின் உச்சிப்பகுதியில் மிக நீண்ட வடிவமுடைய குகை 15அடி நீளம், 4 அடி அகலம் கொண்டு நுழைவு வாயில் அமைப்பு கொண்டும், குகையின் உட்புறங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் அழிந்த நிலையிலும் ஆதி மனிதர்கள் வாழ்ந்தற்கான தடயங்களும் கண்டறியப்பட்டது. இக்குகை காலப்போக்கில் நீரோட்டத்தால் அழிந்த நிலையில் காணப்படுகிறது. தற்போது இக்குகை பொந்து பாறை என அழைக்கப்படுகிறது.


ஆதி கால மனிதர்கள் தங்களை அச்சுறுத்தும் காட்டு மிருகங்கள் தன் கண்ட காட்சிகளை செஞ்சாந்து மற்றும் வெண்சாந்து ஓவியங்கள் மற்றும் குறியீடுகள் பாறைகளில் வரைந்தனர். செஞ்சாந்து ஓவியம் காலத்தால் முற்பட்டது. வெண்சாந்து ஓவியம் என்பது வெப்பாழை என்ற மரத்திலிருந்து பால் எடுத்து இயற்கையாக கிடைக்கும் சுண்ணாம்பு கல் தோய்த்து சுண்ணாம்பு திரவமாக பிரித்து இரண்டையும் கலந்து தனது விரலில் மூலம் வெண்சாந்து ஓவியம் பாறையில் தீட்டினார்கள்.


பாறை ஓவியங்கள் மூன்று கோணங்களின் வரையப்பட்டு இருக்கும். பெரும்பாலும் விலங்கு உருவம் பக்கவாட்டு கோணத்திலும், மனித உருவம் நேர்க்கோட்டு கோணத்திலும் மீன் மற்றும் ஊர்வனவை பறவை கோணத்திலும் வரையப்பட்டு இருக்கும். இப்பகுதியில் கண்டறியப்பட்ட வெண்சாந்து ( வெள்ளை நிறம்) ஓவியம் வேட்டையாடுதல் போன்ற காட்சியும் நீண்ட கழுத்து கொண்ட விலங்கு, குச்சி வடிவத்தில் மனிதன் நடனமாடும் காட்சி மற்றும் குறியீடுகள் போன்ற வரையப்பட்டுள்ளது. இதன் காலம் சுமார் 3000 ஆண்டுக்கு முற்பட்ட வையாகும்.


மலையின் தென்மேற்கு பகுதியில் 2 அடி அகலம் 5 அடி நீளம் கொண்ட மூன்று கற்படுக்கை நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. கற்படுக்கை அருகே மழை நீர் வழிந்தோட குகைத்தளத்தில் வாயிலின் தரை தளத்தில் சிறிய வாய்க்கால் போன்ற வெட்டப்பட்டு இருக்கிறது. குகையின் மேல் பகுதி சிதைந்து காணப்படுகிறது. சிறப்பாக ஆரம்பிக்கப்பட்ட இக்குகை ஏதோ ஒரு காரணத்தால் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது இக்குகையினை பஞ்சு மெத்தை பாறை என்று அழைக்கப்படுகிறது. இதன் காலம் சுமார் 2000 ஆண்டுக்கு முற்பட்டது என கருதலாம்.


மலையின் தரைத்தளத்திலிருந்து 5 அடி உயரத்தில் 3 அடி நீளம் 3 அடி அகலம் கொண்ட பாறைக்கீறல் ஓவியம் முற்றிலும் இரும்பு உளியால் செதுக்கப்பட்டுள்ளது. 17 , 25, 30, என்ற எண்ணிக்கை கொண்ட கோடுகள் தோரணை வாயிலாக மூன்று அடுக்கில் வரையப்பட்டுள்ளது.
பாறைக்கீறலின் இடதுபுறத்தில் மனிதனின் உருவம் கொண்ட மிருகம் தலையோடு இரண்டு உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் சரிந்த கொண்டையுடன் பெண்ணின் உருவம் வட்ட வடிவத்தில் ஆடைஅணிந்து நடனமாடும் காட்சியை வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வகை பாறைக்கீறல் தமிழத்தில் கிருஷ்ணகிரி, பெருமுக்கல் தண்டாரம்பட்டு போன்ற குறிப்பிட்ட இடங்களில் கண்டறியப்பட்டது. தேவன்குறிச்சி மலையில் கண்டறியப்பட்ட பாறைக்கீறல் வரலாற்றின் முக்கியமான மைல்கல்லாகும்.


இப்பகுதியில் மத்திய தொல்லியல் துறையால் IAR 1947, 1958, 1976 போன்ற வருடங்களில் அகழாய்வியல் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தி கற்கருவிகள், கைகக்கோடாரி, நுண்கற் கால கருவிகள், பெருங்கற்கால நினைவு சின்னம் , முதுமக்கள் தாழி மண்பாண்டங்கள் கல்மணிகள் கிளிஞ்சல் வளையல் போன்றவை கண்டறியப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *