ஒற்றைத்தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ்,இபிஎஸ் இடையே மோதல் முற்றிவருகிறது.இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலைசின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இரண்டு மாவட்ட கவுன்சிவர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் 34 பதவிகளுக்கு மட்டும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளதால், வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை சின்னங்களை ஒதுக்க உள்ளது. ஆனால், அதிமுகவில் நிலவும், ஒற்றை தலைமை விவகாரத்தால் எழுந்த உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதில் தற்போதுவரை சிக்கல் நீடிக்கிறது.
வேட்புமனுவில் உள்ள Form A, Form B ஆகியவற்றில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கையெழுத்திடாமல் உள்ளதால் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டைஇலை சின்னம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் போட்டியிடாமல் அதிமுக புறக்கணித்துள்ளது.காஞ்சிபுரம் மாநகராட்சியில் வார்டு 36, தஞ்சாவூர் மாநகராட்சியில் வார்டு 8, தேனி பெரியகுளம் நகராட்சியில் வார்டு 26, மயிலாடுதுறை நகராட்சியில் வார்டு 19 ஆகியவற்றில் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களிலும், புதுக்கோட்டை வார்டு 7, கடலூர் வார்டு 26 ஆகியவற்றில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவில்லை. மீதமுள்ள ஒன்றிய கவுன்சிலர், பேரூராட்சி கவுன்சிலர், மற்ற இதர ஊராட்சி பதவியிடங்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டாலும் அவர்களுக்கு இரட்டை இல்ல சின்னம் கிடைக்காமல் சுயேட்சை சின்னங்களே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. நேற்று இது தொடர்பாக ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார். ஆனால் அதனை ஈபிஎஸ் நிராகரித்து விட்டதால் அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.