• Fri. Apr 26th, 2024

வேளாண் சட்டங்களை சட்டரீதியாக ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதனை வரவேற்று விவசாயிகள் கொண்டாடினர். ஆனால் 3 வேளாண் சட்டங்களையும் பாராளுமன்ற மூலம் சட்டரீதியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 3 வேளாண் சட்டங்களையும் பாராளுமன்றம் மூலம் சட்டரீதியாக ரத்து செய்திட வேண்டும்,
விவசாயிகளின் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை கிடைத்திட சட்டம் ஏற்றவேண்டும், இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்த சட்டம் 2020 மசோதாவை திரும்ப பெற வேண்டும், டெல்லியில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் உரிய இழப்பீடு  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கோட்டை மைதானம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *