• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட கோரி, கோவில் உண்டியலில் மனு அளித்து ஆர்ப்பாட்டம்!..

சேலத்தில் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் பேரணி வந்து கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியலில் மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி இந்து முன்னணி காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், இந்து முன்னணியினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் சேலத்தில் நடைபெற்றது.

சேலம் திருவள்ளுவர் சிலையில் இருந்து பேரணியாக வந்த இந்து முன்னணி அமைப்பினர் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து
கோரிக்கை மனுவை, கோட்டை மாரியம்மன் பாதத்தில் வைத்து வேண்டுதல் நடத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோயில்களில் உள்ள நகைகளை உருக்குவதற்கு தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. தமிழகத்தில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. அதனை மீட்க ஆர்வம் காட்டாமல்,

இதுபோன்ற நடவடிக்கைகளில் தமிழக அரசு வீணாக நேரம் செலவழித்து வருகிறது. தங்க நகைகளை உருக்கும் திட்டத்தின் மூலம் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகைகள், கோயில்களுக்குத்தான் பயன்பட வேண்டும். அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். அதற்காக இந்து முன்னணி இந்த பிரச்சார யாத்திரையை நடத்தி வருகிறது. வரும் 26-ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.