• Tue. Apr 30th, 2024

சிறையில் இருந்தவாறே டெல்லி முதல்வர் நாட்டு மக்களுக்கு கடிதம்

Byவிஷா

Apr 17, 2024

மதுபான ஊழல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால், சிறையில் இருந்தவாறே நாட்டு மக்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
டெல்லி மதுபான ஊழல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறார். தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாத அவர் சிறையில் இருந்தபடியே ஆட்சி நடத்தி வருகிறார். சிறையில் அவரை ஒரு தீவிரவாதியை போல் நடத்தி வருவதாக அவரை பார்த்துவிட்டு திரும்பிய சஞ்சய் சிங் எம் பி மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர்.
இந்த நிலையில் சஞ்சய் சிங் எம்பி இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் நீதிமன்ற காவலில் கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
“கொடுமைகள் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கை மூலம் அவரை மனம் உடைய செய்வதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால் இவை அனைத்திலிருந்தும் மேலும் வலுவுடன் அவர் வெளிப்படுவார்” என்றும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
“நாடறிந்த பிரபலமான குற்றவாளிகள் கூட தனது வழக்குரைஞர் மற்றும் மனைவியை சிறையில் அறையில் சந்திக்க அனுமதிக்கப்படுகிறார். அதே நேரம் பஞ்சாப் முதல்வரை கண்ணாடி தடுப்பு மூலம் கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதித்து உள்ளனர். இதனால் மனம் புண்பட்ட கெஜ்ரிவால் நாட்டு மக்களுக்கு செய்தி ஒன்றை விடுத்திருக்கிறார்.
அதில் “எனது பெயர் அரவிந்த் கெஜ்ரிவால்; நான் ஒரு தீவிரவாதி அல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (கடந்த 2019 ஆம் ஆண்டில் நடிகர் ஷாருக்கான் நடித்த மை நேம் இஸ் கான் என்ற படத்தில் என் பெயர் கான் நான் ஒரு தீவிரவாதி அல்ல என்று வரும் வசனத்தை நினைவூட்டும் வகையில் முதல்வர் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.)
அந்த அளவுக்கு சிறையில் அவர் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு இருக்கிறார். ஒரு முதல்வர் மற்ற முதல்வரையே கண்ணாடி தடுப்புக்கு இடையே தான் சந்திக்க முடிந்திருக்கிறது. திகார் இரண்டாம் நம்பர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கொடுங் குற்றவாளிகள் பலர் தங்கள் அறைக்குள்ளேயே வழக்குரைஞர் மற்றும் மனைவியை சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். (அவர்களின் பெயர் எதையும் சஞ்சய் சிங் வெளியிடவில்லை) ” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *