சாதிய தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்காக தலித் சமுதாயத்தினர் 40 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய நிகழ்வு தேனியில் அரங்கேறியுள்ளது.
போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட டொம்புச்சேரி கிராமத்தை சேர்ந்த கிராமத்தில் தலித் சமுதாயத்தினர் நூற்றுக்கணக்கில் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் சாதிய வன்கொடுமைத் தாக்குதல்கள் தலித் சமுதாயத்தின் மீது நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.இதில் இருந்து மீள்வதற்காக டொம்புச்சேரி கிராமத்தில் வசிக்கும் தலித் சமுதாயத்தை சேர்ந்த 8 குடும்பங்களில் உள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 40 பேர் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளனர்.கடந்த 2010ஆம் ஆண்டு தீபாவளி அன்று தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வந்த பிற சமுதாயத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டு பலர் காயமடைந்ததுடன் உடமைகளும் சேதமடைந்தது என்று கூறியுள்ளனர்.
அதேபோல் இந்து தலித்தாக இருந்தால் குறிப்பிட்ட கோயில்களுக்கு எங்களால் செல்ல முடியாது. ஆனால் இஸ்லாமியராக மாறிய பின்பு எந்த பள்ளிவாசலுக்கும் எங்களால் சென்று இறைவனை வழிபட முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் தலித்துகள் இருப்பதால் முடி திருத்தம் செய்ய மறுக்கப்படுகிறது என்றும் இதனால் அருகிலுள்ள நகரங்களுக்கு சென்று முடி திருத்தம் செய்துகொள்ள வேண்டி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.முன்னதாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தலித் சமுதாயத்தினர் இஸ்லாம் மதத்தைத் தழுவியது, மாநிலம் முழுவதும் பேசும் பொருளான நிலையில் தற்போது தேனியிலும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.