குஜராத்தில் போலி சுங்கச்சாவடி (டோல்கேட்) அமைத்து பல கோடி மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.
குஜராத்தில் போலி சுங்கச் சாவடி அமைத்து ஒன்றரை ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் மற்றும் மக்களை ஏமாற்றி 75 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில் போலி சுங்கச் சாவடி அமைத்து, அதற்கு தனியாக சாலை வசதி ஏற்படுத்தி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை பாதை மாற்றி விட்டுள்ளனர். அப்பாதையில் உள்ள வர்கசியா சுங்கச் சாவடி கட்டணத்தில் 50சதவீதம் மட்டுமே இங்கு வசூல் செய்யப்பட்டு வந்ததால், இதுகுறித்து யாரும் புகார் தெரிவிக்கவில்லை.
நெடுஞ்சாலையில் இருந்து வாகனங்கள் திருப்பி விடப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடந்த ஆய்வில் உண்மை அம்பலமானது. தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.