கொரோனா பரவலு தொற்று குறைந்து வந்த நேரத்தில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் 8000 பேரை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களில் சென்னை.செங்கல்பட்டு பகுதிகளில் அதிகரித்து வருகிறது.
சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங்பேடி, சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பரிசோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். தொற்று பாதித்தவர்களை வீடு வீடாக சென்று கண்காணிக்கவும் வெளியில் வராமல் இருக்கவும் அறிவுறுத்த வேண்டும். வீட்டில் தனிமையில் உள்ளவர்கள் வெளியே வராமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் 3 மண்டல ஆணையர் கட்டுப்பாட்டில் தலா 50 படுக்கைகள் வீதம் 150 படுக்கைகள் கொண்ட கொரோனா கண்காணிப்பு மையம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாளை முதல் கொரோனா பரிசோதனையை 5 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.