பெண்கள் எதையும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள் என்று, தேவேந்திர ஃபட்னாவிஸ் மனைவி முன்னிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானேயின் ஹைலேண்ட் பகுதியில், பதஞ்சலி யோகா பீடம் மற்றும் மும்பை மகிளா பதஞ்சலி யோகா சமிதி சார்பில் யோகா அறிவியல் முகாம் மற்றும் மகளிர் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ரிதா ஃபட்னாவிஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனும் எம்பியுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே உள்ளிட்ட ஏராமானோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், “பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், சல்வார் உடையில் அழகாக இருக்கிறார்கள், எதுவும் அணியாவிட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக இருக்கிறார்கள்” என்று கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் யோகா குரு ராம்தேவ் பெண்களின் ஆடை தொடர்பாக கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.