இந்த சிறப்பு மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் , கோயம்புத்தூர் மாநகராட்சி , பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளை மற்றும் சிறுதுளி ஆகியவற்றுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வு, பிஎஸ்ஜி தொழில்நுட்ப மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் , சிவில் பொறியியல் துறை, கோயம்புத்தூர் மாநகராட்சி, சிறுதுளி மற்றும் பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளை இணைந்து 31 ஜூலை 2026 அன்று, நீலாம்பூரில் உள்ள பிஎஸ்ஜி ஐ டெக் வளாகத்தில் நடத்திய “நிலையான நீர் மற்றும் கழிவு மேலாண்மை” கருத்தரங்கின் போது நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் திரு. கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., அவர்கள், பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் திரு. எல். கோபாலகிருஷ்ணன் அவர்கள், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் திருமதி. வனிதா மோகன் அவர்கள், இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), கான்பூர் முன்னாள் பேராசிரியர் டாக்டர் வினோத் தாரே அவர்கள், கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அரசு, கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கிடையேயான இந்த கூட்டு முயற்சியாக உருவாகியுள்ள சிறப்பு மையம், அறிவியல் அடிப்படையிலான ஆராய்ச்சி, களச் சோதனை, தொழில்நுட்ப விளக்கக் காட்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான நிரந்தர தளமாக விளங்கும். பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளைநிறுவனத்தின் நிதியுதவியுடன் உருவாகும் இந்த மையம், நீர் பாதுகாப்பு, திறன்மிக்க கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் புனரமைப்பிற்கான நிலையான தொழில்நுட்பங்களை விரைவாக நடைமுறைப்படுத்தி, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.




