

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்கள் முன்னதாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன சில மாதங்களிலேயே தற்போது விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக அவர் தெரிவித்திருந்ததுடன், புகைப்படங்கள் சிலவற்றையும் பதிவிட்டிருந்தார். சமீபத்தில்தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது என்றாலும், நயன்தாரா கர்ப்பமாகவும் இல்லை. இதனால் இவர்கள் வாடகைத்தாய் (Surrogacy) முறையில் குழந்தையை பெற்றெடுத்திருக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்த பதிவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, இந்தியாவில் உடல்நல குறைவுக்காக அன்றி மற்றபடி வாடகைத்தாய் முறை தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் செய்தது சட்டத்திற்கு புறம்பானதா என்பது சில நாட்களில் தெரிய வரும் என்றும் பேசியுள்ளார்.தற்போது இது சர்ச்சையாகவும் பேசு பொருளாகவும் மாறியுள்ளது. சிலர் இது அவர்களது தனிபட்ட விஷயம் என்றும் கூறிவருகின்றனர்.
