மதுரை திருப்பரங்குன்றம் அருகே, பாம்பன் நகரில் புதிய நியாய விலை கடை பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மதுரை மாநகராட்சி மண்டலம் 5 தலைவர் ஸ்வீதா விமல், மாமன்ற உறுப்பினர் உசிலை சிவா மற்றும் திருப்பரங்குன்றம் பகுதித் தலைவர் நாகேஸ்வரன், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணிக்கம் தாகூர் எம்பி செய்தியாளரிடம் கூறுகையில்..,
டெல்லி பத்திரிகைகளும் பாஜக கூட்டணியும் எதிர்பார்த்ததைப் போல் அல்லாமல் இந்தியா கூட்டணி வெற்றிகரமாக கூட்டணிகளை உறுதி செய்து வருகிறது. சமஜ்வாதி கட்சி யோடு கூட்டணி பேசப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஆம் ஆத்மி கட்சி யோடு தொகுதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்குப்பின் திரணாமுல் காங்கிரஸ் கட்சியோடும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்தியா கூட்டணி தொடர்ந்து பலமான கூட்டணியாக இருக்கிறது.
தொடர்ந்து, 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மோடியின் ஆட்சி விவசாயிகளுக்கு எதிரான ஆட்சி இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான ஆட்சியாக என்ற நிலையில் உறுதி ஆகிவிட்டது. விவசாயிகள் போராட்டம் டெல்லியில் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் முஸ்லிம் மற்றும் காலிஸ்தான் தீவிரவாதிகள் பங்கு பெறுவதாக பாஜக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு..,
எல்லாவற்றிலும் பாரதிய ஜனதா கட்சியினர் மதத்தை இழுப்பது, பாஜக அனைத்து விஷயங்களிலும் மதத்தை இழுப்பது யாரெல்லாம் உரிமைக்காக போராடுகிறார்களோ அவர்களை எல்லாம் கொச்சைப்படுத்துவது பாஜகவின் வேலை.
அதற்கு ஏற்றார் போல், டெல்லி ஊடகங்களும் பா.ஜ.க விஷயங்களை பெரிது படுத்த விரும்புவதில்ல. உண்மையான விவசாயிகள் நடத்துகின்ற போராட்டம் கடந்தமுறையும் 72 விவசாயிகள் உயிரிழந்தனர். தற்போது முதல் விவசாயி உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சூட்டில் இந்த கொடுமைகள் இதுவரை எதுவும் நடந்ததில்லை. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தமிழக அரசு 70% மானியம் வழங்குவதாக கூறுவது பொய் என அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு.,
அண்ணாமலை உண்மை தவிர எதுவும் கூறுவதில்லை. அனைவருக்கும் தெரிந்த விஷயம் அண்ணாமலை கூறுவதை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர், ஆளுநருக்கும் முதல்வருக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. அவர், தொடர்ந்து பத்திரிகையாளர்களையும் அவமரியாதையாக பேசுவார் .
அவர் கூறுவதை, யாரும் பெரிது படுத்த மாட்டார்கள். என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில், பிரதமர் மோடி கலந்து கொள்வது குறித்து கேள்விக்கு..,
பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது ஐந்து வருடங்களுக்கு முன் செயல்படுத்திய திட்டங்களின் நிறைவு விழாவோ அதில் கலந்து கொள்ள வந்தால் மகிழ்ச்சி அடையலாம்.
ஆனால் , ஒன்பது வருடங்களுக்கு பின் மீண்டும் அடிக்கல் நாட்ட கிளம்பியுள்ளார் தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார். தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.
இந்தியா கூட்டணியில், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற கேள்விக்கு..,
இது பற்றி இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. என்ன முடிவு என்பது வந்தால் உங்களுக்கு அறிவிக்கிறேன் என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறினார்.