• Sat. Feb 15th, 2025

மகனை கைது செய்ததை கண்டித்து, தந்தை தற்கொலை முயற்சி!!!

BySeenu

Feb 1, 2025

கோவை – கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்ததை கண்டித்து, தந்தை காவல் நிலையத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்தார்.

கோவை, கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் பொதுக்கழிப்பிடம் அருகே இளைஞர்கள் நேற்று கஞ்சா விற்பனை செய்து, வருவதாக காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சோதனை செய்ததில் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜானகிராமன் மற்றும் மணிபரத் என்ற இரண்டு இளைஞர்கள் கையில் கஞ்சாவுடன் பிடிபட்டனர்.

இதை அடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 107 கிராம் அளவு உள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தனது மகன் மணிபரத் மீது காவல் துறையினர் பொய்யாக கஞ்சா வழக்கு பதிவு செய்ததாக கூறி அவரது தந்தையான கவுண்டம்பாளையம் சிவாநகர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்து திடீரென தான் கையில் கொண்டு வந்து இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளித்ததால் பரபரப்பு.

இதை அடுத்து அங்கு இருந்த போலீசார் உடனடியாக தீயை அணைத்து சேகரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில், ஆட்டோ ஓட்டுநராக உள்ள சேகர் பாரத் சேனா அமைப்பின் நிர்வாகியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.