கர்நாடகாவில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
கர்நாடகா மாநிலம், பெலகாவியில் பிப்ரவரி 21-ம் தேதி மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசு பேருந்து நடத்துநர் மீது மராட்டிய அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரம் கர்நாடகம்-மராட்டியம் இடையே மொழி பிரச்சினையாக மாறியது. இதன் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் மராட்டிய மாநில பேருந்துகளும், மராட்டியத்தில் கர்நாடக அரசு பேருந்துகளும் தாக்கப்பட்டன. இதனால் இரு மாநிலங்களிடையே பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின் இரு மாநிலங்களிடையே இயல்பு நிலை திரும்பியது.
இந்த விவகாரத்தில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகாவில் இன்று (மார்ச் 22) முழு அடைப்பு நடத்துவதாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார். அதன்படி, கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து தரப்பு மக்களும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், பெங்களூரு மாநகர போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு வழங்கியுள்ளன. அதேநேரம், பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் வழக்கம் போல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளில் இறுதித்தேர்வுகள் நடைபெற்று வருவதால் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முழு அடைப்பு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள நிலையில் கன்னட அமைப்பினர் பெங்களூருவில் இன்று ஊர்வலம் நடத்த உள்ளனர். இதனை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலத்தில், இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கும் நிலையில், தமிழக எல்லையான ஓசூர் வழியாக பெங்களூருக்கு, நேற்றிரவு வரை பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டன.













; ?>)
; ?>)
; ?>)