முன்னாள் மத்திய அமைச்சர் மீது நிலமோசடி செய்ததாக சிவகங்கை SP யிடம் பெண் பரபரப்பு புகார் மனு அளித்தார்.
சிவகங்கை காமாட்சி நகரில் வசித்து வருபவர் தனலட்சுமி. இவருக்கு சுமார் ரூ 7.00 கோடி மதிப்புள்ள 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பூர்வீக நிலம் காஞ்சிரங்கால் பஞ்சாயத்துக்குட்பட்ட தனியார் பள்ளிக்கு பின்புறம் உள்ளது. இந்த இடத்தை பள்ளி நிறுவனரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான சுதர்சன் நாச்சியப்பன் மோசடியாக பத்திரம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து தனலெட்சுமி நீதிமன்றம், DRO அலுவலகம் மற்றும் வருவாய் துறையினரிடம் சென்று தங்களது பெயருக்கு பட்டா வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போலி பட்டா மூலம் தனது இடத்தை அபகரித்துக் கொண்டு சம்மந்தப்பட்ட இடத்திற்குள் நுழைய சுதர்சன் நாச்சியப்பன் மறுப்பதாக குற்றம் சாட்டி இன்று சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனலெட்சுமி மனு அளித்தார். மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து இறக்க உள்ளதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் மீது பெண் ஒருவர் நிலமோசடி செய்ததாக குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.