• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவிலில் மரியாதை அளிப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காரை தீ வைத்து எரித்த திமுகவினர்…

ByKalamegam Viswanathan

Jun 26, 2023

மதுரை மாவட்டம், சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2001 – 2006 ஆம் ஆண்டு சமயநல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்தார். இந்நிலையில், பொன்னம்பலத்தின் சொந்த ஊரான கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவிலின் உற்சவ விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், கோவிலில் மரியாதை அளிப்பதில் கருவனூர் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பினருக்கும், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, வேல்முருகன் தரப்பினர் திடீரென முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்தின் வீட்டில் அவரது மனைவி பழனியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தபோது, திடீரென வீட்டின் மீது கற்களை எறிந்து தாக்க தொடங்கி வீட்டின் ஜன்னல்களையும், டீவி, ப்ரிட்ஜ். பைக் கார்களை உடைத்தனர்.


தொடர்ச்சியாக, பொன்னம்பலத்தின் காரை பெட்ரோல் ஊற்றி எறித்ததோடு, அருகில் இருந்த வீடுகளையும் கற்களால் எறிந்து உடைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், பொன்னம்பலத்தின் உறவினர்களான பழனிக்குமார். வேல்விழி, சுப்பையா, விஜய் ஆகிய 4பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், மற்றொரு தரப்பான திருப்பதி என்பவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் தாக்குதல் நடத்திய திமுக கிளை செயலாளர் வேல்முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாகினர்.
கோவில் விழாவில் மரியாதை அளிப்பதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கார் எரிப்பு, வீடுகள் உடைக்கப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சத்திரபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


கோவில் விழாவை முன்னிட்டு், காவல்துறையினர் பாதுகாப்பு பணியல் ஈடுபடுத்தப்பட்ட நிலையிலும், முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டு கார் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது கிராமத்தை சுற்றிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.