சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல்திருவிழா கடந்த மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 17-நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்டது.

விழா நாட்களின் போது பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பத்ரகாளியம்மனுக்கு தங்களின் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி, அம்மனை மனமுருக வணங்கி வழிபாடு செய்தனர். கொடி இறக்கப்பட்டு சித்திரை பொங்கல் திருவிழா முடிவடைந்ததை முன்னிட்டு, அம்மனை மனம் குளிர செய்ய பத்திரகாளியம்மன் கோவில் வளாக தெப்பத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது. தெப்ப திருவிழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தேரினில், பத்ரகாளியம்மன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி, 6- முறைகள் தெப்பத்தை சுற்றி வலம் வந்து தெப்ப வளாகத்தை சுற்றிலும் நின்றிருந்த பக்தர்களுக்கு காட்சியருளி அருள் பாலித்தார்.

தெப்ப உற்சவ திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பத்ரகாளியம்மனை வணங்கி வழிபட்டனர். தெப்பத் தேரோட்டத்துடன் , பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா நிறைவு பெற்றது.




