தமிழகம் முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் தமிழகமே வெள்ளக் காடாக மாறியது. வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை முதர்வர் தினமும் மேற்பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார். அந்தவகையில் இன்று தூத்துக்குடி செல்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் மதியம் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு 1.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை வந்தடைகிறார். தொடர்ந்து தூத்துக்குடி பிரையண்ட்நகர், அம்பேத்கர்நகர், ரகுமத் நகர் உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
மேலும் தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார். பின்னர் கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார்.