விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி மலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு கருதி 2015 ம் ஆண்டுகளுக்கு பின்னர் குறிப்பிட்ட மாதத்தில் அமாவாசை பௌர்ணமி பிரதோஷம் என குறிப்பிடப்பட்ட சில நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பங்குனி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நாளை ஏப்.21 ஆம் தேதி முதல் ஏப்.24ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இரவில் மலை கோயிலில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது.
மேலும், அனுமதிக்கப்பட்ட நாளில் மழை பெய்தால் மலையேற செல்ல தடை விதிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.