36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவிய நிலையில் சந்திரயான் -3 எப்போது ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அதன்படி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது. இதனை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோமநாத் செய்தியாளர்களிடம் பேசும்போது …..சந்திரயான்-3 விண்கலம் ஏறக்குறைய தயாராகி விட்டது. இறுதியான ஒருங்கிணைப்பு பணி மற்றும் பரிசோதனை ஆகியவை ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது. எனினும், சில பரிசோதனைகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன. அதனால், அவற்றை சிறிது காலத்திற்குள் செய்து முடிக்க நாங்கள் விரும்புகிறோம். பிப்ரவரி மற்றும் ஜூன் என பொருந்த கூடிய இரு காலங்களில் ஜூனை (2023-ம் ஆண்டு) தேர்வு செய்து அதனை விண்ணில் செலுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார். விண்ணில் அனுப்பிய 36 செயற்கைக்கோள்களில் 16 செயற்கைக்கோள்கள் தனியாக பிரிந்து பாதுகாப்புடன் சென்றுவிட்டன. மீதமுள்ள 20 செயற்கைக்கோள்கள் அடுத்து பிரிந்து செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.