தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், குமரிக்கடல் பகுதிகளிலிருந்து தென் தமிழகம் வரை வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மார்ச் 25ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. பெருமபாலான பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதற்கிடையே, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தேனி, தென்காசியில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.