தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று (ஜன. 23-ம் தேதி) தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனி நிலவ வாய்ப்புள்ளது. நாளை (ஜன. 24-ம் தேதி) தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 25 மற்றும் 26-ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், அவற்றை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.