தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்வதன் காரணமாக, இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விருதுநகர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதற்கடுத்த 2 நாட்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக, வட கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழத்தில் இன்று அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.