வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் டிச.18ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், டிசம்பர் 18ம் தேதி வரை வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
அந்தமான் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். குறைந்த காற்றழுத்த தாழ்வால் டிசம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை தமிழகத்தில் மிக கனமழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
டெல்டா மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்தமான், அதனை ஒட்டிய கடல்பகுதியில் 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் 16ம் தேதி கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 17ம் தேதி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 18ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
