காசநோய் ஒழிப்பில் சாதனை மதுரை மாவட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் வெள்ளிப்பதக்கம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழத்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
காசநோய் ஒழிப்பில் சாதனை படைத்த மதுரை மாவட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கியது. தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினிடம் மதுரை மாவட்ட துணை இயக்குநர் மரு சுபைர் ஹசன் முகம்மது கான் வாழ்த்து பெற்றார்!. மதுரை மாவட்டம் காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தியதன் மூலம் 2015ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் காசநோயின் பாதிப்பு தற்போது மதுரை மாவட்டத்தில் 40 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. அதை பாராட்டும் விதமாக மத்திய அரசின் சார்பில் வெள்ளி பதக்கம் மதுரை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் காசநோய் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா , உத்திரபிரதேர மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் உள்ளிட்டோர் பங்கேற்ற தேசிய அளவில் நடைபெற்ற உலக காசநோய் தினத்தில் விருதுக்குரிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு பிரதமரிடம் இருந்து தமிழகம் சார்பில் பங்கேற்ற தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஸ் பதக்கங்களையும் பாராட்டு சான்றிதழையும் பெற்றார்.
தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் , தலைமைச் செயலர் வெ. இறையன்பு கலந்து கொண்ட நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் துணை இயக்குநர்களின் சிறப்பான பணியை பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார் .