• Fri. Apr 26th, 2024

தோடர் இன மக்களின் பாரம்பரிய ‘மொர்பர்த்’ பண்டிகை கொண்டாட்டம்

பழங்குடி தோடர் இன மக்களின் பாரம்பரிய ‘மொர்பர்த்’ பண்டிகை இன்று ஆடல் பாடலுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது…
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியையொட்டி தோடர் இன மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் வாழும் இடங்களை (கிராமம்) மந்து என்று அழைக்கப்படுகிறது,இவர்கள் தங்களது பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களை இன்றும் கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் உதகை தலைகுந்தா அருகேயுள்ள முத்தநாடு மந்து,(கிராமம்) தோடர் இன மக்களின் தலைமை இடமாக திகழ்ந்து வருகிறது. இங்குள்ள தோடர் இன மக்கள் எதிர் வரும் புத்தாண்டு பண்டிகையோட்டி ஆண்டுதோறும் டிசம்பர் இறுதி வாரத்தில் ’மொர்பர்த்’ என்ற பெயரில் விழா கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல் இந்த ஆண்டு உதகை அருகே முத்தநாடு மந்தில் ‘மொர்பர்த்’ பண்டிகையை தோடர் இன மக்கள் இன்று கொண்டாடினர். இதையொட்டி விரதம் இருந்தவர்கள் அங்குள்ள மூன்போ என்ற கோவிலுக்கு அனைவரும் சென்று வழிபட்டனர் . அவர்கள் நெற்றியில் சந்தன பொட்டு வைத்தும், தங்களது பாரம்பரிய உடை அணிந்து வழிபட்டு காணிக்கை மற்றும் நேர்த்திக் கடனை செலுத்தினர்கள்.இதனைத் தொடர்ந்து மூன்போ கோவிலை சுற்றி நின்றபடி அனைவரும் தங்களது பாரம்பரிய பாடலை பாடி நடனமாடி மகிழ்ந்தனர்.
இதனை தொடர்ந்து தோடர் இன இளைஞர்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் இளவட்ட கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. 70 கிலோ எடை கொண்ட கல் மீது வெண்ணெய் பூசப்பட்டு கல்லை தோடர் இன இளைஞர்கள் ஆர்வத்துடன் தோளில் தூக்கி வைத்து முதுபுறமாக கீழே போட்டு அசத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *