ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114 ஆவது ஜெயந்தி மற்றும் 59 ஆவது குருபூஜை விழா கடந்த 28 ந்தேதி தொடங்கி நேற்று 30ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், நேற்று முன் தினம் 29 ந்தேதி நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள வந்த மண்டலமாணிக்கம் பகுதி இளைஞர்கள் சிலர், TN-66 G 0745 என்ற பதிவெண் கொண்ட காவல்துறை வாகனத்தின் கூரை மீது ஏறி குத்தாட்டம் போட்டதால், 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக, காவல்துறை வாகனத்தை வழிமறித்து, கூரை மீது ஏறி சேதப்படுத்தி, ஓட்டுனரை அசிங்கமா பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று குத்தாட்டம் போட்ட இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கூறும்போது, காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று இளைஞர்கள் ஆடிய சம்பவம் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. விழா முடிந்ததும், புகார் பெற்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்திருந்தையடுத்து இன்று வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.