


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
புறவழிச்சாலை கோரிக்கையும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளதால் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாகவே உள்ளது.


இந்நிலையில் உசிலம்பட்டியின் மையப்பகுதியான மதுரை ரோடு பழைய இந்தியன் வங்கி அருகில் ரேசன் கடைக்கு பொருட்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் திடீரென பழுதாகி நின்ற நிலையில் பழுதை சரி செய்ய ஓட்டுநரும், மெக்கானிக் வந்தும் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்குள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ஒரு கட்டத்தில் பழுதை சரி செய்ய கால தாமதம் ஆவதை எண்ணிய உசிலம்பட்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு லாரியை தள்ளியே சாலையோரம் கொண்டு செல்ல முயன்றனர்.
சரக்கு லாரி என்பதால் கடின போராட்டத்திற்கு பின் சுமார் 50 மீட்டர் வரை சரக்கு லாரியை தள்ளியவாறு சாலையோரம் கொண்டு சென்றனர்.
தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்த போக்குவரத்து பாதிப்பை காவல்துறையினரும் இணைந்து சரி செய்தனர்.
போக்குவரத்து பாதிப்பை உணர்ந்து சரக்கு லாரியை தள்ளியே ஓரம்கட்டி போக்குவரத்து பாதிப்பை சரி செய்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

