சென்னையில் டிசிஎஸ் உள்பட மூன்று ஐ.டி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோழிங்கநல்லூரில் உள்ள இன்போசிஸ், மேட்டுக்குப்பத்தில் உள்ள டிசிஎஸ் மற்றும் துரைப்பாக்கத்தில் உள்ள சென்னை ஒன் போன்ற நிறுவனங்களுக்கு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு வைத்துள்ளதாக தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து, அலுவலகங்களிலிருந்த ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தகவல் கிடைத்த உடனே, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்டு போலீசார் விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் காணப்படவில்லை. மிரட்டல்கள் வெறும் பொய்யானவை என உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், ஒரே நாளில் மூன்று நிறுவனங்களுக்கு மிரட்டல் வந்தது, ஐடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சைபர் பிரிவு போலீசார் மின்னஞ்சல் அனுப்பியவரை கண்டறிவதற்காக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது. கடந்த நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விமான நிலையம், அரசியல் தலைவர்கள் வீடுகள், மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் ஏற்பட்டுள்ளன. இவை அனைத்தும் பொய்யானவை என தெரியவந்தாலும், அவை ஏற்படுத்தும் அச்சம் மற்றும் வேலைநிறுத்தம் காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகும் எதிர்பார்ப்பு நிலவுகிறது
பிரபல ஐ.டி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
