மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சுற்று பயணம் மேற்கொண்டு பிராச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில், மும்பை சென்றுள்ள அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா தாக்கரே, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் ஆகியோரை மம்தா பானர்ஜி சந்தித்தார்.
அதுமட்டுமின்றி தனது பயணத்தின்போது மம்தா பானர்ஜி, திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், நடிகர்கள் ரிச்சா சத்தா, ஸ்வாரா பாஸ்கர், முனாவர் ஃபரூக்கி, சுதீந்திர குல்கர்னி உள்ளிட்ட பலரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவை கொடூரமான மற்றும் ஜனநாயகமற்ற கட்சி என்று குற்றம்சாட்டினார். மேலும் அவர் “இந்தியா மனித சக்தியை விரும்புகிறது, தசை பலத்தை அல்ல. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது தோற்றம். துரதிர்ஷ்டவசமாக பாஜகவின் கொடூரமான, ஜனநாயகமற்ற மற்றும் நெறிமுறையற்ற அணுகுமுறையை நாம் எதிர்கொள்கிறோம். பாஜகவால் மகேஷ் பட் பாதிக்கப்பட்டார், ஷாருக்கான் பலியாக்கப்பட்டார் என்பது எனக்குத் தெரியும். இன்னும் பலர் உள்ளனர், சிலர் வாயைத் திறக்கலாம், சிலரால் முடியாது” என்று கூறினார்.
அக்டோபர் மாத தொடக்கத்தில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு ஒருமாதம் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர், முறையான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.