• Thu. May 15th, 2025

மாணவர்களுக்கு பயோமெட்ரிக் புதுப்பித்தல் : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Byவிஷா

Apr 28, 2025

பள்ளி விடுமுறையில் மாணவர்கள் 5 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களுக்கு பயோமெட்ரிக் புதுப்பித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி விடுமுறையில் அப்பணிகளை மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளிலேயே ஆதார் பதிவு மேற்கொள்ளுதல், 5 வயது முதல் 17 வயது வரையுள்ள மாணவர்களுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுப்பிக்கத் தவறியவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் செய்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் ஆதார் கார்டு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு வாங்க பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகும். அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், ஆதார் எடுக்கவும் புதுப்பிக்கவும் சிக்கல் ஏற்படுகிறது. ஆதாரில் பயோமெட்ரிக் அப்டேட் செய்வது பெரிய சவாலாக மாறி வருகிறது. இந்த சூழலில் தான், கோடை விடுமுறையில் ஆதாரை புதுப்பிக்காதவர்கள் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளாமல் இருந்தால், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் இ-சேவை மையங்கள், அஞ்சலகங்கள் மற்றும் வட்டாரவள மையங்களில் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தலை மேற்கொள்ளலாம். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், புதிதாக பள்ளியில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களிடம் பள்ளியில் சேரும்போதே இந்த பணிகளை நிறைவு செய்யுமாறு கோர வேண்டும். இதன் மூலம் வங்கிக் கணக்குகள் தொடங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகள் கால தாமதமின்றி கிடைக்க உதவும். இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.