வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் குழந்தைகளை வைத்து பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிகளிலும், குழந்தைகளை பணி செய்ய அனுமதிக்கக் கூடாது. மக்களவை தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் குழந்தைகளை வைத்து பிரசாரம் மேற்கொள்ளவோ, சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகம் செய்யவோ, முழக்கம் எழுப்பவோ, பேரணிகளில் ஈடுபடுத்துவதையோ அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பிரசார மேடைகளில் பேச வைப்பது, முழக்கமிட வைப்பது, பிரசுரங்களை விநியோகிக்க வைப்பது, பாடல் பாட வைப்பது, கவிதை பேச வைப்பது உள்ளிட்ட எந்த ஒரு செயலிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் குழந்தைகளை கையில் தூக்கி செல்வது, பிரச்சாரம் மற்றும் பேரணி வாகனங்களில் குழந்தைகளை ஏற்றுவதற்கு தடை விதிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சி தலைவர்களின் அருகிலோ, கூட்டங்களில் பெற்றோருடன் குழந்தைகள் பங்கேற்றால் அது விதி மீறல் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.