டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா்.
டெல்லியில் சட்டப் பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது இதனைத் தொடர்ந்து பிப்.8-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி டெல்லியில் பிரச்சாரப் பணிகளை ஆம் ஆத்மி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் முடுக்கி விட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஆம் ஆத்மி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டதுடன் தனித்துப் போட்டி என்றும் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தலில் கூட்டணி இல்லை, தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லி சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் பிப்ரவரி 5 அன்று ஒரே கட்டமாக நடைபெறும். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
பகுஜன் சமாஜ் கட்சி இந்தத் தேர்தலில் முழு தயார் நிலையிலும், பலத்துடனும் போராடுகிறது. இந்தத் தேர்தலில் கட்சி நிச்சயம் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல்கள் ஜனநாயகத்தின் முதுகெலும்பு, மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்சி என்ற வகையில், இந்த தேர்தல்கள் வகுப்புவாதம் மற்றும் அரசாங்க இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்துவது உட்பட பிற எதிர்மறை தாக்கங்களில் இருந்து விடுபடுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.