திருப்பூர் மங்கலம் ரோட்டில், ‘டிவின் பெல்ஸ்’ என்ற ஹோட்டல் உள்ளது. கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி திறக்கப்பட்ட இந்த ஹோட்டலில், நாளை (17ம் தேதி) இரவு ‘டிஜே நைட் பார்ட்டி’ நடப்பதாகவும், ஜோடிகளுக்கும், பெண்களுக்கும் இலவச அனுமதி என்பதுடன், ‘பெண்களுக்கு இலவச மதுபானம்’ என்ற விளம்பரம் சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில், ஹோட்டல் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. அத்துடன், மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ‘அப்படி எந்த பார்ட்டியும் நடக்காது’ என, ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, ஹோட்டல் நிர்வாகி பார்த்திபன் கூறியதாவது: “எங்கள் ஹோட்டலில் முறையாக அனுமதி பெற்றே வர்த்தகம் நடக்கிறது.இந்த விளம்பரம் ‘டிஜிட்டல் மார்க்கெட்டிங் டீம்’ மூலம் தவறுதலாக வேறு ஹோட்டலுக்கு பதிலாக எங்கள் ஹோட்டல் பெயரில் வெளியாகி விட்டது.தகவல் தெரிந்தவுடன், இதுகுறித்து விளக்கத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளோம். விளம்பரம் குறித்து எங்கள் தரப்பில் வருத்தம் தெரிவித்துள்ளோம்.அதில் குறிப்பிட்டுள்ளது போல் எந்த ‘டிஜே பார்ட்டியும்’ ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதுகுறித்து சென்ட்ரல் போலீசிலும் விளக்கம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளோம்.
விதிகளுக்குப் புறம்பாகவும், கலாச்சாரத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் எந்த நிகழ்ச்சியும் நடத்துவதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம். ” என்று அவர் கூறினார்.