• Thu. Apr 25th, 2024

33 ஆண்டுகள் கழித்து தமிழில் வெளியாகும் ஐயப்பன் பக்தி படம்

Byதன பாலன்

Jan 10, 2023

ஸ்ரீவெற்றிவேல் ஃபிலிம் அகாடமி சார்பில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து கூட்டு முயற்சியாக தயாரித்திருக்கும் படம் ‘ஸ்ரீசபரி ஐயப்பன்’.33 வருடங்களுக்கு பிறகு வெளியாக இருக்கும் ஐயப்ப பக்தி படமான இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை மற்றும் இயக்கம் என 6 முக்கிய பொறுப்புகளை இயக்குநர் ராஜா தேசிங்கு கையாண்டுள்ளார்.
இதில் நாயகனாக விஜய பிரசாத் நடிக்க, நாயகியாக பூஜா நாகர் நடித்திருக்கிறார். இயக்குநர் ராஜா தேசிங்கும் மிக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் கஞ்சா கருப்பு, சோனா, சாம்ஸ், முத்துக்காளை, ராஜேந்திரநாத், வடிவேல் கணேஷ், உடுமலை ரவி, மங்கி ரவி, போண்டா மணி, இந்தியன், ராஜாசாமி, விஷ்வகாந்த், சுமதி, சின்னாளப்பட்டி சுகி, லதா, சுவேதா என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.மகேஷ் மகாதேவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பாபு அரவிந்த் இசையமைத்துள்ளார். எஸ்.பி.அகமது படத் தொகுப்பு செய்ய, சஞ்சிவ் கண்ணா நடனக் காட்சிகளையும், சரவெடி சரவணன் சண்டைக் காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர். பத்திரிகை தொடர்பு கோவிந்தராஜ்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நேற்றைக்கு நடைபெற்றது.
இதில், சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினா, இயக்குநர் பேரரசு, விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன், பார்மெட் நியூமராலஜி மகாதன் சேகர் ராஜா, துரை சங்கர், பாடகர் எஸ்.என்.சுரேந்தர், துரை கண்ணன், ஏ.கே.நாகேஸ்வர ராவ், வினோத் சங்கர், நடிகர்கள் முத்துக்காளை, சாம்ஸ், போண்டா மணி, பக்தி பாடகர் வீரமணிதாசன், முத்து சிற்பி உள்ளிட்ட பலதுறைகளின் பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சியில் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரான கே.ராஜன் பேசுகையில், “இந்த இடத்தில் பல இசை வெளியீட்டு விழாக்கள் நடத்திருக்கின்றன. நானும் பல விழாக்களில் கலந்து கொண்டு வருகிறேன். ஆனால், இந்த ‘ஸ்ரீசபரி ஐயப்பன்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு மன நிறைவையும், மன மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறார்.
மிக சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஐயப்ப வேடமிட்டிருக்கும் சிறுவர்களை பார்க்கும்போது மனது நிறைவாக இருக்கிறது. நான் இப்போது மருத்துவமனையில் இருக்க வேண்டியவன். எனக்கு இரண்டு நாட்களில் அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. ஆனால், அங்கு போகாமல் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு காரணம், ஐயப்பனின் அருளை பெறுவதற்காகத்தான். இந்த படத்தின் மூலம் ஐயப்பன் அருளை பெற்றுக் கொண்டு செல்லவே இங்கு வந்தேன். நிச்சயம் இந்த படம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டும் இன்றி, ரசிகர்கள் அனைவருக்கும் ஐயப்பன் அருளை வழங்கும். இந்தப் படத்தை அனைவரும் பார்த்து கொண்டாட வேண்டும்.” என்றார்.

இசையமைப்பாளர் தீனா பேசுகையில்,

“படத்தின் இசையமைப்பாளார் பாபு ஆனந்த், எங்களது சங்க உறுப்பினர், அவருக்கு என் வாழ்த்துகள். படக் குழுவினருக்கும் என் வாழ்த்துகள்.
பக்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக பாபு ஆனந்த் அறிமுகமாவது அவருடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன். என் படத்திலும் ஒரு பக்தி பாடல் இடம் பெற்றது. ஆம், விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ படத்தில் வரும் “கும்பிட போன தெய்வம்…” என்ற பாடல்தான். அந்த பாடல் ஏராளமான கோவில்களில் ஒலித்தது. ஆடி மாதம் வந்துவிட்டால், அந்தப் பாடல் ஒலிக்காத கோவிலே இருக்க முடியாது, அப்படி ஒரு வெற்றி பாடலாக அமைந்ததோடு, நானும் அந்த பாடல் மூலம் பிரபலமடைந்தேன்.ஒரு பக்தி பாடலுக்கே நான் பெரிய உயரத்தை தொட்டேன் என்றால், பக்தி படத்திற்கே பாபு ஆனந்த் இசையமைத்திருப்பதால் அவர் நிச்சயம் மிகப் பெரிய உயரத்திற்கு செல்வா, ஐயப்பன் அருளால் அவர் பிரபலமடைவார்.
இயக்குநர் ராஜா தேசிங்கு மிக சிறப்பாக நடித்திருக்கிறார். மலைக்கு செல்பவர்கள் கடின பாதையில் நடந்து செல்லும்போது அவர்கள் உடம்பில் ஏற்படும் சோர்வு, அதை தவிர்க்க அவர்களின் உற்சாக ஆட்டம் என்று அனைத்தையும் மிக இயல்பாக செய்திருக்கிறார். நானும் ஒரு முறை சபரிமலைக்கு சென்றிருக்கிறேன், அந்த அனுபவத்தில்தான் செல்கிறேன், ராஜா தேசிங்கின் நடிப்பு இயல்பாக இருந்தது. நாயகன் உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் டிரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. அதிலும், டிரைலர் முடியும்போது “பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்று எவண்டா சொன்னது?” என்ற கேள்வி கேட்கப்படுகிறது. பெண்கள் செல்வது சரியா? அல்லது தவறா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், என் தனிப்பட்ட கருத்து பெண்களும் சபரி மலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில்,

“பிரசாத் லேபில் நடைபெற்றும் இசை வெளியீட்டு விழாவுக்கு நான் பல முறை வந்திருக்கிறேன். பல நிகழ்ச்சிகளில் கூட்டம் வரும். ஆனால் இன்று வந்திருக்கும் கூட்டத்தைபோல் எந்த நிகழ்ச்சியிலும் நான் பார்த்ததில்லை. அப்படி என்றால் பக்தி படங்களுக்கு எத்தகைய வரவேற்பு இருக்கிறது என்று பாருங்கள்.சில மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் என் மதம்தான் பெரியது என்று சொல்வார்கள். வேறு சில மாநிலங்களில் இஸ்லாமியர்கள் தங்கள் கடவுளை பெரிதாக பேசுவார்கள், பல மாநிலங்களில் இந்து கடவுகளை பெருமையாக பேசுவார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் கடவுள் இல்லை என்று சொல்வார்கள். ஆனால், தமிழகம் புண்ணியய பூமி. கடவுள்கள் நடமாடிய பூமி. இங்கு ஆன்மீகத்திற்கு எப்போதும் அதிகமான வரவேற்பு உண்டு.
33 வருடங்களுக்கு பிறகு வெளியாக இருக்கும் ஐயப்பன் பக்தி படமான ‘ஸ்ரீசபரி ஐயப்பன்’ மிக சிறப்பாக வந்திருக்கிறது. பாடல்கள் மற்றும் டிரைலரை பார்க்கும்போதே படம் எப்படி இருக்கும் என்று தெரிகிறது.
இது போன்ற ஆன்மீக படங்கள் அதிகமாக வர வேண்டும். அது கிறிஸ்தவர், இஸ்லாமியர், இந்து என எந்த மதத்தை சேர்ந்த படமாக வேண்டுமானாலும் இருக்கலாம். பக்தி படங்கள் அதிகமாக வரண்டும். இந்த ‘ஸ்ரீசபரி ஐயப்பன்’ படத்தையும் மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று பார்க்க வேண்டும். திரையரங்குகளுக்கு மக்கள் சென்று படத்தைப் பார்த்து வெற்றி பெற செய்ய வேண்டும். அப்படி நடந்தால் இது போன்ற பக்தி படங்கள் அதிகமாக வரும். மக்கள் வாழ்க்கையும் வளம் பெறும்…” என்றார்.

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில்,

“ஸ்ரீசபரி ஐயப்பன் திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கும் அனைத்து பெருமக்களுக்கும் வணக்கம்.
இந்தப் படத்தின் டிரைலரில் ஒரு வசனம் வருகிறது, “பெண்கள் சபரிமலைக்கு போக கூடாது என்று யார் சொன்னது..?” என்று. அதேபோல், இசையமைப்பாளர் பேசும்போது, “பெண்கள் சபரிமலைக்கு போகலாம்” என்று சொன்னார்.உண்மைதான். சபரிமலை இந்தியாவின் புனிதமான மலை. இஸ்லாமியர்களுக்கு மெக்கா புனிதமான இடம். கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலம் புனிதமான இடம். அதுபோல், ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை புனிதமானது.ஐயப்பன் வழிபாடு என்பது வெறும் வழிபாடு இல்லை. மற்ற வழிபாடு போல் இல்லை. இந்த வழிபாடு என்பது நம்மை நாம் ஐயப்பனாக மாறுவது. சபரிமலை சாஸ்தாதான் இந்த வழிபாடு, விரதம் அனைத்தையும் நமக்கு வகுத்து கொடுத்தது. மற்ற விரதங்களைப் போல் இது சாதாரண விரதம் இல்லை. உடல், மனம் என அனைத்தும் பக்குவமாக இருப்பதோடு, ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டும் அல்ல, இறைவனிடம் சரணாகதியடைய வேண்டும்.
பக்தி இல்லாமல் இந்த உலகம் இல்லை. நம்முடைய எந்த ஒரு காரியம் என்றாலும் இறை பக்தியோடு செய்தால் வெற்றி கிடைக்கும். திருக்குறளே பக்தியோடுதான் தொடங்கும். பெரிய புராணமும், கம்ப ராமாயணமும் கடவுள் வாழ்த்தோடுதான் ஆரம்பிக்கிறது.
கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்ல கூடிய நாத்திகர்கள் இருக்கிறார்கள். ஆனால், நம் கடவுள்களை மட்டும்தான் அவர்கள் இல்லை என்று சொல்வார்கள். மற்ற மத கடவுள்களை அப்படி சொல்வதில்லை, அவர்களுடைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்கி வைப்பார்கள், முடித்து வைப்பார்கள்.அதனால்தான் ஐயப்பன் பார்த்தார். நாத்தீகம் பேசுபவர்கள் கருப்பை அவர்களுடைய வண்ணம் என்று சொல்கிறார்கள். அதை ஐயப்பன் பக்தி வண்ணமாக மாற்றி விட்டார். மாலை போடுபவர்கள் கருப்பு உடை அணிகிறார்கள், இப்போது அது ஐயப்பன் வண்ணமாக மாறிவிட்டது. அதுபோல் சிவப்பு வண்ணத்தை பார்த்தால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியே என்று வணங்குகிறார்கள்.
33 வருடங்களுக்கு பிறகு ஐயப்பன் படம் வருகிறது. இதை மக்கள் கொண்டாட வேண்டும் ஐயப்ப பக்தர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.இந்த நேரத்தில் நான் இந்து சமய அற நிலையத் துறை அமைச்சருக்கும், அரசுக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். எங்கேயோ இருக்கிற நாட்டுக்கு செல்ல பிற மதத்தினருக்கு நிதி உதவி செய்யும் அரசு, தமிழகத்தில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களில் மாவட்டத்திற்கு இரண்டாயிரம் பேரை தேர்வு செய்து அவர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும்.
இந்த ‘ஸ்ரீசபரி ஐயப்பன்’ திரைப்படத்தின் டிரைலர் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் ஐயப்பனின் பெருமை உலகறிய செய்வதோடு, இந்து மதத்தின் பெருமையும் பேசப்படும் என்று நான் நம்புகிறேன். படம் நிச்சயம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *