மதுரையில் நடைபெற்ற காற்று மாசு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியில் திரளான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்
மத்திய அரசின் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, மதுரை மாநகராட்சியுடன் இணைந்து காற்று மாசு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சேதுபதி மேல்நிலைப் பள்ளியிலிருந்து நடைபெற்ற இந்த பேரணியை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் தேசிய பசுமை படை மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி விழிப்புணர்வு கோஷங்களையும் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாகச் சென்றனர். இந்த பேரணி வடக்கு வெளிவீதி கிருஷ்ணராயர் தெப்பப்ச் சாலை மற்றும் மீனாட்சி பஜார் வழியாக சென்று மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா மதுரை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்