




காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 25 பேர் பலி. பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் காயமடைந்துள்ளனர்.
ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஜஸ்தான், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் காயமடைந்துள்ளனர்.


சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி செல்லும் பைசரன் பள்ளத்தாக்கில், மலையேற்றத்திற்காக சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதை அடுத்து கூடுதல் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணி குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தொலைபேசியில் பேசினார். தகுந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்திற்கு செல்லுமாறும் பிரதமர், அமித்ஷாவிடம் கேட்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இதை எடுத்து அமித்ஷா ஸ்ரீநகர் புறப்படுகிறார். இதனிடையே, இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா ஆதரவு அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களை சும்மா விடமாட்டோம் என்று அமித்ஷா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி இந்த சம்பவம் குறித்து காணொலி காட்சி மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அனைத்து ஏஜென்சிகளுடனும் அவசர பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தை நடத்த நான் உடனடியாக ஸ்ரீநகர் செல்கிறேன்” என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்தியவர்கள் சுற்றுலாப் பயணிகள் அருகே வந்து சுட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர்.
இப்பகுதிக்கு நடந்தோ அல்லது குதிரையிலோ மட்டுமே செல்ல முடியும் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். காயமடைந்தவர்களை மீட்பதற்காக அதிகாரிகள் ஹெலிகாப்டர்களை அப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே, இந்த தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த சில பயங்கரவாதிகள் என்று பாஜக தலைவர் ரவீந்தர் ரெய தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


